சனி, 1 ஆகஸ்ட், 2009

பயங்கரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள்







பயங்கர ஆயுதங்களுடன் சென்னைக் கல்லூரி மாணவர்கள் தாக்குதல்
இந்தியா, சென்னை எழும்பூர் ரயில் நிலைய பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவத்தையடுத்து அவ்விடம் போர்க்களம் போன்று காட்சியளித்தது.பஸ்ஸொன்றில் இடம்பெற்ற இம்மோதலின் போது, அதில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.மாணவன் ஒருவனின் காது அறுந்தது. பஸ் அடித்து நொறுக்கப்பட்டது.இம்மோதலுக்கான காரணம் தெரியவில்லை என்று தாக்கப்பட்ட மாணவர்கள் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து கோயம்பேடு செல்லும் பஸ் நேற்று முன்தினம் பச்சையப்பா கல்லூரிக்குச் செல்லும் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலைய பஸ் நிலையத்திற்குள் நுழைந்தது.அந்த பஸ் நிலையத்தில், பஸ்ஸுக்காக காத்திருப்பது போல் சுமார் 40, 50 மாணவர்கள் ஏற்கனவே நின்றிருந்தனர். பஸ் தரிப்பிடத்திற்கு வந்ததும் திடீரென்று பஸ் நிலையத்தில் நின்றிருந்த மாணவர்கள் கையில் வைத்திருந்த கத்தி, வீச்சரிவாள், உருட்டுக்கட்டை, கிரிக்கெட் ஸ்டம்ப் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பஸ்ஸுக்குள் புகுந்தனர்.பஸ்ஸில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது சரமாரியாகத் தாக்கினார்கள். குறிப்பாக, கல்லூரி மாணவர்களைக் குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.4, 5 பேர் முன்பக்க வாசல் வழியாகவும், மீதி இருந்தவர்கள் பின்பக்க வாசல் வழியாகவும் ஏறி தாக்குதலை நடத்தினார்கள். தாக்குதலின் போது பஸ்ஸை நோக்கி கற்கள், சோடா போத்தல்கள் போன்றன வீசப்பட்டன.பஸ்ஸின் ஜன்னலோரம் இருந்த மாணவர்களை வெளியே நின்ற எதிர் கோஷ்டியினர் இரும்பு கம்பியால் குத்தினார்கள். அப்போது பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பஸ்ஸில் அமர்ந்திருந்த பயணிகள் சிலரது மீதும் உருட்டுக் கட்டை அடி விழுந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த திடீர்த் தாக்குதலைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் அலறி அடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி வெளியே ஓடினார்கள். பஸ்சில் இருந்து அவசரமாக கீழே குதித்ததில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.தாக்குதலை நடத்திய மாணவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரயில் நிலைய தண்டவாளம் வழியாக புதுப்பேட்டையை நோக்கி தப்பித்து ஓடிவிட்டனர். காயம் அடைந்த பயணிகளும், மாணவர்களும் நாலாபுறம் சிதறி ஓடினார்கள். சம்பவ இடத்தில் செருப்பு, புத்தக பை, ஆயுதங்கள், சோடாப் போத்தல்கள், கண்ணாடித் துண்டுகள் ஆகியவை ஆங்காங்கே சிதறிகிடந்தன. இதனால் ரயில் நிலைய பஸ் நிலையம் போர்க்களம் போல் காட்சியளித்தது.இந்த சம்பவத்தில் பச்சையப்பா கல்லூரி மாணவர் ஒருவருக்கு காதில் அரிவாள் வெட்டு விழுந்ததில் காது அறுந்து தொங்கியது. இரத்தம் சொட்ட, சொட்ட அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்.சம்பவம் குறித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின் போது, எங்களை தாக்கியது அண்ணாசாலையில் உள்ள ஆண்கள் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள்தான். ஆனால் ஏன் தாக்கினார்கள் என காரணம் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.சம்பவத்திற்கான காரணம் குறித்தும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்தும் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள். இதேவேளை சுமார் 50 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக