திங்கள், 3 ஆகஸ்ட், 2009

மறக்க முடியாத நிஜங்கள்




அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாக கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர், இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.
இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. அணுசக்தித் துறையை இந்தியாவில் நிர்மானித்த அந்தப் பெரும் சிற்பி 30.10.1909ல் பிறந்தவர். குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தூங்கவேண்டிய நேரத்திற்கும் மிகமிகக் குறைவாக ஹோமி தூங்கியதால் தந்தை ஜஹாங்கீர் தாய் மெஹ்ரூன் கவலை கொண்டு மருத்துவரிடம் காட்டியபோது குழந்தையிடம் அபார மூளைச் சக்தி இருப்பது தெரியவந்தது. எந்த அளவுக்கு இருந்த தென்றால் 15 வயதில் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு குறித்த 'தியரி'யைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இருந்தது.1930ல் கேம்ப்ரிட்ஜில் மெக்கானிக்கல் இன் ஜினீயரிங் முடித்தவருக்கு 1934ல் ஐசக் நியூட்டன் ஃபெல்லோஷிப் விருது கிடைத்தது. 1937ல் அவர் எழுதிய Cascade Theory of Electron Showers என்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. Cosmic Radiation உள்ளிட்ட அவரது ஆய்வுகள் இயற்பியல் துறையில் புதிய சாதனைகளைப் படைத்தன. பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அழைத்தும் அவற்றை மறுத்து 1939ல் இந்தியா திரும்பிய ஹோமி பாபா 'விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்' என்று பிரகடனப்படுத்தி அதற்காகக் கடுமையாக உழைத்தார்.31 வயதில் 'மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி' விருதும் (1941) அதற்கடுத்த ஆண்டு ஆடம்ஸ் விருதும் (1942) பெற்றார். 1945ல் Tata Institute of Fundamental Research நிறுவனம் தொடங்க இவரே காரணமாகும்.Atomic Explosion, Production of Isotopes, Purification of Uranium முதலியன குறித்து முதன் முதலாக இந்தியாவில் ஆய்வு செய்து இந்தியாவில் அறிவார்ந்த சூழலை ஏற்படுத்திய இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறைத் தந்தை இவர். நாடு சுதந்திரமடைந்ததும் Atomic Research Centre ஒன்றை அரசு தொடங்குவதற்கு வகை செய்த ஹோமி பிரதமர் நேருவுக்கு நெருங்கிய தோழராக விளங்கினார்.மத்திய அரசில் அணுசக்தித் துறை என்று தனியாகவே ஒரு துறை பிரதமர் நேருவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தொடங்கப்பட வைத்தார். இவரது முயற்சியால் 20.01.1957ல் ஆக்கப்பணிகளுக்காக அணுசக்தி உற்பத்திக்கு வித்திடப்பட்டது. 1955ல் அணுசக்தி சம்பந்தமாக ஜெனீவாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொள்ளப் பாபாவே முன் நின்று அனைத்தையும் செய்து முடித்தார்.ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் கடுமையான முயற்சியின் விளைவாகவே தாராப்பூர் (மகாராஷ்டிரம்), ராணா பிரதாப் சாகர் (ராஜஸ்தான்), கல்பாக்கம் (தமிழ்நாடு) ஆகிய மூன்றிடங்களிலும் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் மையங்கள் உருவாயின. இந்தியாவிலேயே தோரியம், புளூட்டோனியம் முதலியவற்றைச் சரியான முறையில் உற்பத்தி செய்யவும், விவசாயம், தொழில், மருத்துவம், உயிரியல் துறைகளுக்குப் பயன்படும் ரேடியோ ஐசோடோப்பைத் தயாரிக்கவும் ஹோமி பாபா ஆற்றிய பங்கு அளவிடற்கரியது.பெங்களூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் கெளரி பிட்னூர் எனுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் பாதாள அணு வெடிப்பு சம்பந்தமான ஆராய்ச்சி மையம் ஒன்று அமையவும்,கல்கத்தா, அஹமதாபாத், கேரளா, காஷ்மீர் முதலிய இடங்களில் பல்வேறு விஞ்ஞான மையங்கள் அமையவும், அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாகவும் கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.18.05.1974ல் பொக்ரான் (ராஜஸ்தான்) முதல் அணுசக்திச் சோதனையின் வெற்றி மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவைத் தொடர்ந்து உலகளவில் ஆறாவது நாடாக இடம்பெற்று இந்தியா உயர்ந்ததென்றால் அதன் அடிப்படை நாதமாக விளங்கியது பாபா ஆரம்பித்து வளர்த்து வந்த கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி முயற்சிகளும்தான்.அனைத்துலக மாநாட்டிற்காக 24.01.1966 அன்று ஏர் இந்தியா போயிங் 707 விமானத்தில் பயணித்தபோது பனிப்புயல் தாக்க ஏற்பட்ட விபத்தில் வபாத்தானவர் ஹோமி பாபா. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் பல்கலைக் கழகங்களிடமிருந்தும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் ஹோமி பாபா. இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம் 12.01.1967 முதல் 'பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்' ( Bhabha Atomic Research Centre ) எனப் பெயரிடப்பட்டது.மத்திய அரசு அக்டோபர் 2008 அக்டோபர் 2009 ஹோமி ஜஹாங்கீர் பாபா நூற்றாண்டு என்று அறிவித்திருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் இவர் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். என்றாலும் திருமணம் கூட செய்துகொள்ளாமல் இந்திய அணுவிஞ்ஞானத் துறைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஹோமி ஜஹாங்கீர் பாபா பிற முஸ்லிம் அறிவியலாளர்கள் மற்றும் தலைவர்களைப் போன்றே மறைக்கப்படுகிறாரென்பதும் மறக்கடிக்கப்படுகிறாரென்பதும் வேதனைக்குரியதே
அறிவியல் மேதைகள் -ஹோமி ஜஹாங்கீர் பாபா (Dr Homi Jehangir Bhabha)
முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி
பாபா ஒரு சிறந்த அறிவியல் மேதை மட்டுமல்ல; கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லாற்றல் மிக்கவர்; சிறந்த நிர்வாகி; எளிய, ஆடம்பரமற்ற வாழ்க்கையை நடத்தியவர். இந்திய அணு ஆற்றல் திட்டங்களின் முன்னோடியாகவும் அவற்றை வடிவமைத்துச் செயல்படுத்திய செயல் வீரராகவும் பாபா நினைவுகூரப்படுகிறார். இன்று இந்தியாவில் இருக்கும் பல அணு உலைகள், அணு ஆற்றல் நிலையங்கள் ஆகியன அவர் முயற்சியால் தோன்றியவையே. இத்தகைய ஆறிவும் ஆற்றலும் மிக்க அவர், ஓர் அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்ள விமானத்தில் வெளிநாடு சென்றபோது விபத்தில் சிக்கி 1966 ஜனவரி 24ஆம் நாளன்று இந்திய அறிவியலுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பை ஏற்படுத்திவிட்டு மறைந்துபோனார்.
பாபா 1909ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் மும்பையில் பெரும் பணக்காரப் பார்சிக் குடும்பத்தில் தோன்றினார். தொடக்கக் கல்வி கற்கும்போதே அறிவியல் பாடங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதே அளவு ஆர்வத்தை ஓவியம், இசை, கவிதை ஆகியவற்றிலும் அவர் காட்டிவந்தார். மும்பை எல்ஃபின்ஸ்டன் கல்லூரி, ராயல் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பாபா, மேற்படிப்புக்காக கேம்பிரிட்ஜ் சென்றார். அங்கு 1930இல் பொறியல் பட்டமும், 1934இல் முனைவர் பட்டமும் பெற்றார். அப்போது உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களான நெயில்ஸ் போர், ஃபெர்மி, பாலி ஆகியோரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. அண்டவெளிக் கதிர்கள் (Cosmic rays) மற்றும் மெசன்ஸ் எனும் துகள்கள் பற்றிய தமது ஆய்வுகள் வழியே பாபா அறிவியல் உலகினரால் இனங்காணப்பட்டார்.
1940இல் தாயகம் திரும்பிய பாபா பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் இயற்பியல் துறைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். 1945ஆம் ஆண்டு டாட்டா அடிப்படை ஆய்வு மைய நிறுவனத்தை உருவாக்கி அதன் இயக்குநராகவும் பொறுப்பேற்றார். அணு ஆராய்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து நிதி உதவிகளையும் இந்திய அரசிடம் இருந்து அவரால் பெற முடிந்தது. இதற்குக் காரணம் அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவுக்கும், பாபாவுக்கும் இருந்த நெருங்கிய நட்பே ஆகும். இந்திய அணு ஆற்றல் ஆணையத்தின் முதல் தலைவராக 1948இல் பாபா பொறுப்பேற்றார். அவரது திறமையான வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பினால், இந்திய அறிவியலார் அணு ஆற்றல் துறையில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டு உழைத்தனர். இதன் விளைவாக ஆசியாவின் முதல் அணு உலையான அப்சரா மும்பையில் உள்ள டிராம்பேயில் 1956இல் இயக்கப்பெற்றது.
பாபா திருமணம் செய்துகொள்ளாமலே அறிவியல் பணியில் தம் வாழ்வை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். அணு ஆற்றலை அமைதிப்பணிக்கும், பாதுகாப்புக்கும் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற கொள்கையில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். இதனால் அணு ஆற்றலை அமைதிப் பணிக்குப் பயன்படுத்துவது பற்றிய முதலாவது ஐக்கிய நாடுகளின் மாநாட்டிற்குத் தலமை ஏற்கும் வாய்ப்பு 1955ஆம் ஆண்டு அவருக்குத் தரப்பட்டது.
இந்திய அறிவியல் அறிஞர்களான கே.எஸ். கிருஷ்ணன், சத்தியேந்திர போஸ், விக்ரம் சாராபாய், பீர்பல் சஹானி, எஸ்.கே.மித்ரா போன்றோருடன் ஒப்பிடத்தக்கவர் பாபா அவர்கள். அவரது நினைவைப் போற்றும் வகையில் டிராம்பேயில் உள்ள அணு ஆற்றல் நிறுவனம் பாபா அணு ஆய்வு மையம் என்றும், டாட்டா அடிப்படை ஆய்வு மைய நிறுவனம் பாபா அடிப்படை ஆய்வு நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இத்தகு சிறப்பும், மேன்மையும் கொண்ட பாபா அவர்கள் விதியின் கொடுமையால் விபத்தில் சிக்கி உயிரிழந்தது இந்தியர்களின் தவக்குறைவேயாகும்.
***
முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி
மொழிக் கல்வித்துறை (தமிழ்)
வட்டாரக் கல்வியியல் நிறுவனம்
மைசூர் 570006
E Mail:rqgha2193van@yahoo.com
நாம் மறந்தாலும், நம்மை மறக்க செய்தாலும் நல்லவர் செய்த நன்மைகள் நம்மை விட்டு போகாது இந்தியாவில் மதசார்பற்ற நாடு எதில் சந்தேகமில்லை. இருப்பினும் மத வெறியர்களுக்கும் உரிமையல்லவா இருக்கு. ஒரு சமுதாயத்தில் இருக்கும் சில கெட்ட விசங்களை கலையெடுத்து விட்டு நல்லதை மட்டும் பார்க்கும் பக்குவம் வர வேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக